வெள்ளி, 1 நவம்பர், 2013


widgeo.net

போலி சாரதி அனுமதிப்பத்திரம்; இருவர் கைது



போலி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த சவளக்கடை போக்குவரத்து பொலிஸார், வீதியால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடம் காப்புறுதி இல்லாத காரணத்தால் அவரின் அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் வாங்கிவைத்துவிட்டு அவருக்கு தண்டத்துக்கான பற்றுச்சீட்டை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை புதிதாக வழங்கிய சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை கொழும்பு தேசிய போக்குவரத்து  தலைமையகத்தில் சோதனை செய்தபோது வழங்கப்பட்ட சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  நேற்று வியாழக்கிழமை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவரையும்  அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை  வைத்திருந்ததாகக் கூறப்படும்   நபர் கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரை நாடி மோட்டார் சைக்கிளுக்கும் முச்சக்கரவண்டிக்கும்  சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக  முகவருக்கு 26,000 ரூபா வழங்கியுள்ளார்

இதன் பின்னர் ஒருவாரகாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய வானங்கள் ஓட்டுவதற்கான புதிதாக வந்துள்ள சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தை முகவர் வழங்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது

இது தொடர்பான விசாரனையை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.     

widgeo.net

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!


கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் சற்றுமுன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரிடம் கையளிக்கப்பட்டது.

இத்தீர்மானங்களை ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கையளிக்கவுள்ளதுடன் தொடர்ந்தும் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.அமீர்;, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், ஏ.எம்.நபார், எம்.முபீத் மற்றும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது வர்தக சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.நஸீர்; மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கட்சி போராளிகள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 





கல்முனை மாநகர முதல்வர் இராஜினாமா இழுபறி தொடர்பாக எதிர்கால முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருடன் இணைந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என்பன மேற்கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

widgeo.net

கல்முனை மேயராக இன்றிலிருந்து சிராஸ் மீராசாஹிப் செயற்பட முடியாது

 


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

கல்முனை மேயர் பதியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் இந்த இராஜினாமாவிற்கான காலக்கெடு நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைகின்றது. எனினும் இதுவரை சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லை.

'இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது. இதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கமாட்டாது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். அவ்வாறு வழங்குவார்களாயின் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.