கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வரின் அறைக்கு ஆப்பு?
கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரத்தியேக அறை தற்போதைய பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்தபோது ஆணையாளரின் அறைக்கு முன்பாக பிரத்தியேக அறை வழங்கப்பட்டிருந்தது. அவ்வறையில் குளிரூட்டி (ஏசி), சோபா, பிரத்தியேக தொலைநகல் (பெக்ஸ்) மற்றும் இணைய இணைப்பு, கணணி, பிறின்டர், ஸ்கேனர் என சகலவிதமான வசதிகளும் முன்னாள் முதல்வர் சிராஸினால் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அவ்வறையில் இருந்த சகல பொருட்களும் அகற்றப்பட்டு ஒரு மேசை கதிரை மாத்திரம் உள்ள ஒரு வெற்று அறையாக காணப்படுகிறது. அவ்வறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட 'பிரதி முதல்வர்' என்ற பெயர்ப் பலகையும் உடைத்து வீசப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையானது பிரதேச சபையாக காணப்பட்ட காலப்பகுதியில் இருந்து பிரதி தவிசாளர்களுக்கு பிரத்தியேக அறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வராலறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த இராவணன் எப்படி சிங்களவனாவான்?
உண்மையில் இஸ்லாம் இந்து, பௌத்த மதங்களுக்கு முற்பட்டது என்பதாலும் முதல் முஸ்லிமும் முதல் மனிதனுமான ஆதம் இலங்கையில்; இறங்கி அவரின் வாரிசுகள் இங்கேயே வாழ்ந்தனர் என்பதனாலேயே ஆதம் வாரிசு என்ற அறபுச்சொல் ஆதிவாசியாக மருவியுள்ளதை காணலாம். அத்துடன் இலங்கை இந்திய எல்லையில் அழிந்து போன பாலத்தை ஆதம் பாலம் என்றே அங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பாலத்தின் வழியாகவே ஆதம் மக்கா சென்று திரும்பினார். சேது பாலம் என தமிழில் அழைக்கப்படும் பெயர் கூட சீது என்ற இறைத்தூதரின் பெயராகும் என்பதை இஸ்லாம் கூறுகிறது.
அதே போல் இராவணன் சம்பந்தப்பட்ட வரலாற்றுக்கதையில் வரும் பெயர்களான ராவணன் என்பது அரசன் என்ற பொருள் கொண்ட ராஇனன் என்பதும் ராமன் என்பது ரஹ்மான் என்பதும் சீதா என்பது சய்யிதா என்பதையும் அனுமான் என்பது நுஃமான் என்பதையும் வாலி என்பது அதே அறபுச்சொல் மூலம் பாவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தப்பெயர்களுக்கும் இந்து, பௌத்த பெயர்களுக்கும் எந்தவொரு நெருக்கத்தையும் நாம் காண முடியாது. மாறாக அறபு மொழிக்கே மிக மிக நெருக்கமாக உள்ளன.
ஆக ராம் மற்றும் ராவணன் வரலாறு என்பது முஸ்லிம்களின் வரலாறாகும். காலப்போக்கில் இந்த வரலாறு திரிபு படுத்தப்பட்டு இந்துக்கள் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வாறு மோசே என்ற மூசாவை பின்தொடர்ந்த முஸ்லிம்கள் அவர் இல்லாத போது காளை மாட்டை வணங்கி இந்துக்காளாக மாறினார்களோ அவ்வாறே இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்களாக, பௌத்தர்களாக மாறியுள்ளனர்.
ஆகவே இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகமாகவே இருந்துள்ளது என்பதை எம்மால் உறுதிபட கூற முடியும் என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்தார்.
சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்
வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. வட கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள் , கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள் வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி பணிக்கப்படுகிறார்கள் என்று அரியநேத்திரன் கூறுகிறார்.
எனவே வட கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறியதாக அவர் தெரிவித்தார்.
சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடவேண்டுமாக இருந்தால் , தேசிய கீதமே பாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒரு நிர்வாக மொழியாக தமிழ் இருக்கும்போது , ஏன் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும் நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்தக் கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்ளே எனவும் , அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்லவென்றும் அவர் தெளிவுபடுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பௌத்த நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு இடமில்லை : பொதுபல சேனா எச்சரிக்கை
முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையுமென பொது பல சேனா பௌத்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதேவேளை, தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இலங்கையில் இடமில்லை. பிரிவினை கோருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது.
அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
''பள்ளிவாசல்களை மூடுமாறு தடை விதித்தமை நீங்கள் கூறும்வரை எனக்கு தெரியாது'': ஹக்கீமிடம் ஜனாதிபதி
தெஹிவளை பிரதேசத்தில் மூன்று பள்ளிவாசல்களை மூடுமாறு தெரிவிக்கப்படுவது பற்றி தம்மிடம் அமைச்சர் ஹக்கீம் புதன்கிழமை கூறும்வரை வேறெவரும் அதுபற்றி சொல்லவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.
தெஹிவளைப் பகுதியில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளமை குறித்தும் முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பிலும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதியமமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொண்டுவந்துள்ளார்.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் குறித்து அரசாங்கமானது உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்ளிவாசல்கள் தொடர்பான விவகாரம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்கள் மத்தியிலும் கொந்தளிப்பையும் விசனத்தையும் உண்டுபண்ணுகின்றது. எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளை களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெஹிவளை தாருல் அர்க்கம், தெஹிவளை அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா ஆகிய பள்ளிவாசல்களை மூடுமாறு பொலிஸார் வற்புறுத்துவது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, பள்ளிவாசல் தொடர்பான விவகாரம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்கள் மத்தியில் கொதிப்பையும் விசனத்தையும் உண்டு பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
விஷம சக்திகளால் உந்தப்பட்டு, அரசாங்க உயர்மட்டத்திற்கு தெரியாத விதத்தில் பொலிஸார் தான்தோன்றித்தனமாக இவ்வாறான இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய சமய விரோத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது கண்டிக்கப்பட வேண்டியதென்று அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.
மூன்று பள்ளிவாசல்களை மூடிவிடுமாறு தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெஹிவளை பிரதேசத்தில் மத்ரஸா நடத்துவதென்று அனுமதி பெற்று தொழுகை நடத்தும் ஓரிடத்தைப் பற்றி மட்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லியுள்ளார். அதுபற்றி அமைச்சர் பெளசியும் தம்மிடம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்கள் நாள்தோறும் ஐவேளைகள் தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாத்தின் கட்டாய கடமைகளில் ஒன்று என்ற காரணத்தினால் மத்ரஸாக்களில் தொழுவதைக்கூட தடுக்கக்கூடாதென ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
SMS மூலம் புகாரிடும் முறை அறிமுகம்
ஜனவரி முதல் நடைமுறை
அமைச்சர் நவீன் திசாநாயக்க சபையில் அறிவிப்பு
அரச ஊழியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஊக்குவிப்பு (போனஸ்) கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். இதன் ஊடாகவே அவர்களிடமிருந்து தரமான சேவையை எதிர்பார்க்க முடியும் என அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சேவையில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக எமது அமைச்சு தீவிர முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது. அரச ஊழியர்களின் கடமைகள் தொடர்பாக எமது அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் போது அரச ஊழியர்கள் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
5 மணி நேரம் மட்டுமே ஒரு அரச ஊழியர் கடமை புரிந்தால் அரச நிர்வாக சேவையின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவோம். இதனை முற்றாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக அரச நிறுவனங்களில் 5 எஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பாக அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் செய்யப்படவுள்ளன.
முதற்கட்டமாக குருநாகல் மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் இவை முன்னெடுக்கப்பட வுள்ளது. அத்துடன் அரச நிறுவன மொன்றுக்கு செல்லும் ஒருவர் தமக்கு தேவையான வேலையை செய்வதற்கு முடியாது போகுமிடத்து அதனை எஸ். எம். எஸ். குறுந்தகவல் ஊடாக முறைப் பாடு செய்து தேவையான தகவலைப் பெறுவதற்கான முறை ஒன்று ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது. 40,000 ரூபா வரையிலான குறைந்த சம்பளத்தை பெறுகின்றனர். வெளிநாடுகளில் அரச ஊழியர் ஒருவரின் கடமைகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவருக்கு போனஸ் வழங்கும் நடவடிக்கையும் உள்ளன. இதேபோன்று இலங்கையிலும் போனஸ் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
அரச முகாமைத்துவ, மறுசீரமைப்பு அமைச்சு உட்பட தெரிவுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.